Reading Time: < 1 minute

உக்ரைன் இராணுவத்திற்கு கனடா அளித்த பயிற்சியின் தாக்கம் காரணமாகவே, முக்கிய கனேடிய தளபதிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

உக்ரைன் இராணுவத்தினருக்கு கனடாவின் 6 முன்னாள் தளபதிகள் குழு ஒன்று பயிற்சி அளித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் 61 முக்கிய கனேடியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியானது.

அதில் ஒருவர் லூக்-ஃபிரடெரிக் கில்பர்ட் (Luc-Frederic Gilbert) என்ற முன்னாள் இராணுவ தளபதி. இவர் உட்பட 6 முன்னாள் தளபதிகளே உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்து வந்துள்ளனர்.

தற்போது ரஷ்யா தடை விதித்துள்ளதை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள தளபதி லூக்-ஃபிரடெரிக் கில்பர்ட் (Luc-Frederic Gilbert), உக்ரேனில் கனேடிய இராணுவத்தின் செயற்பாடு காரணமாகவே ரஷ்யா இந்த முடிவுக்கு வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

2015ல் இருந்தே உக்ரைனில் கனேடிய இராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கமே, சோவியத்துக்குப் பிந்தைய உக்ரைன் இராணுவத்தை நாட்டைப் பாதுகாக்கும் திறன் கொண்ட நவீன போர்ப் படையாக மாற்ற உதவுவதாகும்.

பெப்ரவரியில் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரையில் 33,000 உக்ரேனிய வீரர்கள் கனடாவால் பயிற்சி பெற்றதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.