Reading Time: < 1 minute

ஒண்டாரியோவின் மேப்லெட்டன் பகுதியில் 5 குழந்தைகள் பலியான கோர விபத்தைத் தொடர்ந்து, கிராமப்புற சாலைகளில் விபத்துகளைத் தடுப்பதற்கான அவசரப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை ஒண்டாரியோ மாகாணக் காவல்துறை மற்றும் உள்ளூர் மேயர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tamil Business Directory

கிராமப்புற சாலைகளில் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், ஒண்டாரியோ காவல்துறை “Stop, Look, Live” (நில், கவனி, உயிர்வாழ்) என்ற விழிப்புணர்வு மற்றும் தீவிரக் கண்காணிப்புப் பிரசாரத்தை அடுத்த வாரம் முழுவதும் முன்னெடுக்கவுள்ளது.

இது குறித்துப் பேசிய காவல்துறையின் ஊடகத் தொடர்பாளர் டெரெக் ரோஜர்ஸ், “இந்த விபத்து நடப்பதற்கு முன்பே இத்திட்டம் திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் ஒண்டாரியோவில் சுமார் 5,000 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் கால்வாசி (25%) விபத்துகள் சாலைச் சந்திப்புகளில் நிகழ்ந்தவை என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

விபத்து நடந்த எல்மைரா பகுதியை உள்ளடக்கிய வுல்விச் டவுன்ஷிப் மேயர் சாண்டி ஷாந்த்ஸ், கிராமப்புற சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்கள் கிராமப்புறச் சாலைகளில் குதிரை வண்டிகள், விவசாயக் கனரக வாகனங்கள், மிதிவண்டிகள் மற்றும் பாதசாரிகள் எனப் பலரும் பயணிக்கிறார்கள்.

சாலைகள் நமது பயணத்தை எளிதாக்கினாலும், நாம் அவற்றை மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் கையாள வேண்டும் என்பதை இந்தத் துயரம் நமக்கு நினைவூட்டுகிறது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விபத்துக்குள்ளான வேனில் பயணித்தவர்கள் அனைவரும் இருக்கை பட்டி முறையாக அணிந்திருந்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதன் முழு விபரங்கள் அடுத்த சில வாரங்களில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறச் சாலைகளில் வேகக் கட்டுப்பாடு, சந்திப்புகளில் தரித்துச் செல்லுதல் மற்றும் இருக்கை வார் அணிதல் போன்ற விதிகளின் மூலம் மட்டுமே இனிவரும் காலங்களில் இத்தகைய கற்பனை செய்ய முடியாத இழப்புகளைத் தடுக்க முடியும் என அதிகாரிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.