சில சந்தர்ப்பங்களில் பொருளாதாரம் பலவீனமாக இருந்தாலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய நிலை உருவாகலாம் என கனடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு வர்த்தக கொள்கைகள், கனடா–அமெரிக்க வர்த்தக உறவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி போன்றவை பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தி விநியோக அதிர்ச்சிகளுக்கு (supply shocks) வழிவகுக்கலாம் என வங்கியின் துணை ஆளுநர் சாரோன் கோசிக்கி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் பலவீனமாக இருக்கும் நேரங்களில் கூட நிதியியல் கொள்கையை கடுமையாக்க வேண்டியிருப்பது பலருக்கு ஆச்சரியமாக தோன்றலாம். ஆனால் சில நேரங்களில் இதுவே நாம் எதிர்கொள்ள வேண்டிய கடினமான நிலைமையாகும்,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரிய அளவில் அல்லது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விநியோக அதிர்ச்சிகள் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் நிதியியல் கட்டுப்பாடுகள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தற்போதைய வங்கியின் கொள்கை முடிவெடுப்பில் நேரடியாக இடம்பெறவில்லை எனவும், தற்போதைய சர்வதேச இராணுவ பதற்றங்கள் குறித்து அவர் குறிப்பிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த நிதியியல் கொள்கை அறிவிப்பு மார்ச் 18ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.
அப்போது முக்கிய வட்டி விகிதம் 2.25% ஆக மாற்றமின்றி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தை 2% இலக்கிற்கு அருகில் வைத்திருக்க உதவும் என வங்கி கருதுகிறது.
அதேவேளை, விநியோக அதிர்ச்சிகள் பணவீக்கத்தில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பொருளாதார செயல்பாட்டை பாதித்தால், வட்டி விகிதத்தை உயர்த்துவதற்குப் பதிலாக அதை தளர்த்தும் வாய்ப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.