Reading Time: < 1 minute

மார்க்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நால்வர் கொலையுண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 23 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது நான்கு முதல்தர கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

Mingay Avenueவுக்கு கிழக்கே, Castlemore Avenueவில் அமைந்துள்ள வீடொன்றில் பலர் காயமடைந்து இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அங்கே அந்த வீடடின் முகப்பு வாசலில் ஆண் ஒருவர் நின்றிருந்ததாகவும், வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கே நான்குபேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை அடுத்து விபரம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பில் 23 வயதான மென்ஹாஸ் ஸமான் என்பவரைக் கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் கைது செய்யப்பட்டவரின் தாய், தந்தை, சகோதரி மற்றும் பாட்டி எனவும் தெரிவித்துள்ளனர்.

நால்வரின் சடலங்கள் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் முடிவடைந்த பின்னரே அவர்கள் தொடர்பிலான மேலதிக விபரங்களை வெளியிடமுடியும் எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் வேறு எவரையும் தேடவில்லை என்றும், கைது செய்யப்பட்டவர் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டு அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ள விசாரணை அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினரைத் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.