பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாண எல்லையில், தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பெருமளவிலான அபின் (Opium) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா (Delta) பகுதியில் உள்ள கனடா எல்லைப் பாதுகாப்பு முகமையின் (CBSA) துவாஸன் கன்டெய்னர் பரிசோதனை மையத்தில் (Tsawwassen Container Examination Facility) தொழில்துறை பயன்பாட்டிற்கான பிரம்மாண்ட காகிதச் சுருள்களுக்குள் (Industrial-sized rolls of paper) மறைத்து வைக்கப்பட்டிருந்த 520.6 கிலோகிராம் (அரை டன்னுக்கும் அதிகம்) அபின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போதிலும், செவ்வாய்க்கிழமை அன்றே எல்லைப் பாதுகாப்பு முகமை இதனை அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 14 ஆம் திகதி, எல்லைப் பாதுகாப்பு முகமையின் தேசிய இலக்கு மையம், பசிபிக் பிராந்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் ரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய கடல் கன்டெய்னர் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தக் கன்டெய்னர் சிங்கப்பூர் வழியாக டெல்டா பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இது அசல் எந்த நாட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்ற விபரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். முன்னதாக, திங்கள்கிழமையும் சர்ரே (Surrey) பகுதியில் ஒரு போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டு, இரு வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.