Reading Time: < 1 minute

கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று தங்கியிருக்கும் மில்லியன் கணக்கானோரின் அனுமதிகள் காலாவதியாக இருப்பதால், அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளதாக திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) பகிர்ந்து கொண்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு 1.49 மில்லியன் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றவர்களின் அனுமதிகள் காலாவதியாகியுள்ளன.

இந்த ஆண்டு மேலும் 1.4 மில்லியன் பேரின் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் காலாவதியாக உள்ளன.

ஆக, இரண்டு ஆண்டுகளில் காலாவதியாகும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கை, 2.9 மில்லியன்.

இந்த ஆண்டு காலாவதியாகும் அந்த 1.4 தற்காலிக குடியிருப்பு அனுமதிகளில், 55 சதவீதம், ஜூன் மாதத்தில் மட்டும் காலாவதியாக உள்ளன.

இந்த சூழலில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, இவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறும் வகையில் கடந்த ஆண்டில் 395,000 இடங்கள் இருந்ததாகவும், இந்த ஆண்டு மேலும் 380,000 இடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது, அந்த 2.9 மில்லியன் பேரில் நிரந்தரக் குடியிருப்பு அந்தஸ்தைப் பெறுபவர்கள் போக, குறைந்தது 2.1 மில்லியன் மக்கள் காலாவதியான அல்லது காலாவதியாகும் விசாவுடன் விடப்படுவார்கள்.

அப்படி விசா காலாவதியானவர்கள், கனடா புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அனுப்பியுள்ள மின்னஞ்சல் ஒன்று தெரிவிக்கிறது.

ஒருவர் கனடாவில் தற்காலிக அந்தஸ்து பெற்றிருப்பதால், அது அவர் நிரந்தரக் குடியிருப்பு பெறுவார் என்பதற்கு அத்தாட்சி அல்ல என்றும் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆக, தற்காலிக குடியிருப்பு அனுமதி காலாவதியான 2.1 மில்லியன் மக்கள் கனடாவை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.