Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் விடுமுறைக்காக சென்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக டொமினிகன் குடியரசில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

ட்ரிஸ்டன் பிரைமோ போய்ட்ராஸ் (Tristan Primeau Poitras) என்ற இளைஞர், மார்ச் 23ஆம் திகதி தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, புவெர்டோ பிளாட்டா – மைமோன் நெடுஞ்சாலையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு தேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த போது அவர் தற்காலிகமாக ரியூ பச்சாட்டா (Riu Bachata) ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில், 23 வயதான ஜோர்டி யூனியர் செவேரியானோ மற்றும் 30 வயதான ராங்கல் மெரெட்டே ரொட்ரிகஸ் ஆகியோர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது அவருடன் இருந்த அவரது சகோதரர், அடையாள அணிவகுப்பில் இந்த இருவரையும் அடையாளம் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள், இளைஞரும் அவரது சகோதரரையும் தடுத்து கொள்ளையடிக்க முயன்றதாகவும், அந்த நேரத்தில் அவர்களில் ஒருவரால் சுடப்பட்ட குண்டே மரணத்திற்கு காரணமானதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள் துறை, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.