Reading Time: < 1 minute

சீமெந்துக் கலவையைச் சுமந்துசெல்லும் கனரக வாகனம் மோதியதில் 54 வயதுப் பெண் ஒருவர் பலியான சம்பவம் ரொரன்ரோ மிட்டவுன் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

எக்ளிங்டன் அவனியூ பகுதியில், Yonge Street மற்றும் Erskine Avenueவில் நேற்று முற்பகல் பத்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை ரொரன்ரோ காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த அந்தப் பகுதியில் Yonge Streetஇல் வீதியைக் கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்து திரும்பிய கனரக வாகனம் பெண் மீது மோதியுள்ளது. மோதுண்ட பெண் வாகனத்தினுள் சிக்குண்டு சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும், குறித்த அந்த வாகனத்தில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததா என்று ஆராயப்படுவதாகவும், இந்தச் சம்பவத்தினால் அதிர்ச்சியுற்ற வாகனத்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர், விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், சாரதி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது தற்போதைக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் இருந்தால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.