Reading Time: < 1 minute

கனேடிய மக்கள் மிதமிஞ்சிய அளவில் மருந்து பொருட்களை களஞ்சிய படுத்திக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

சளி காய்ச்சல் பருவ காலம் காரணமாக இவ்வாறு மருந்து பொருட்களை அதிக அளவில் மக்கள் சேகரித்து வைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சிறுவர்களுக்கான மற்றும் வயது வந்தவர்களுக்கான இருமல் மருந்து, தொண்டை வலிக்காக பயன்படுத்தும் மருந்து, சளி மற்றும் காய்ச்சலுக்காக பயன்படுத்தும் மருந்து என்பனவே அதிக அளவில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மருந்தகங்களில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர் மருந்து வகைகள் சிலவற்றுக்கு ஏற்கனவே கனடாவில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தட்டுப்பாடுகளில் சிலவை உற்பத்தி குறைவினால் ஏற்பட்டவை அல்ல எனவும் இவை அதிக அளவில் மக்களால் களஞ்சியப்படுத்தி வைக்கப்படுவதனால் ஏற்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சளி காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

எனினும் இந்த ஆண்டில் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளர்கள் பதிவாக கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முகக் கவசங்களை அணியாமை உள்ளிட்ட சில காரணிகளால் சளி காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான ஒரு பின்னணியில் மக்கள் தேவையற்ற வகையில் மருந்து பொருட்களை களஞ்சியப்படுத்துவது உசிதமானது அல்ல என சுகாதார துறையினர் சுட்டிக்காட்டி உள்ளனர்