Reading Time: < 1 minute

கடும் குளிர் காலநிலை கனடா முழுவதும் பரவியதன் காரணமாக, முக்கிய விமான நிலையங்களில் விமான தாமதங்களும் ரத்துகளும் ஏற்பட்டுள்ளன.

Tamil Business Directory

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் குளிர் காரணமாக கனடாவின் பெரும்பாலான முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய இணையதள தகவலின்படி, வெள்ளி முதல் சனி வரை டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் வருகை–புறப்பாடு கொண்ட 900-க்கும் மேற்பட்ட விமானங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமானவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் 20 சதவீத விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) தெரிவித்ததாவது, ஒன்டாரியோ மாகாணத்தின் பெரும்பகுதி சனிக்கிழமை கடும் பனிக்குளிரை எதிர்கொண்டது.

டொராண்டோ மற்றும் ஒட்டாவா நகரங்களில் காற்றழுத்தத்துடன் கூடிய உணரப்படும் வெப்பநிலை மறை 30 பாகை செல்சியஸுக்கும் கீழ் சென்றது.

இந்த கடும் குளிர் வார இறுதி முழுவதும் நீடிக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமை டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோ பகுதிகளில் 15 முதல் 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று காரணமாக பார்வைத் தூரம் பெரிதும் குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் குளிர் சிறிதளவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையில், குளிர்கால புயலின் தாக்கத்தை நெருக்கமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.