Reading Time: < 1 minute

கனடா அமெரிக்க எல்லைக்கருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு பொலிசார், ட்ரக் ஒன்றிற்குள் 44 வெளிநாட்டவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

Tamil Business Directory

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில், கியூபெக்கில், கனடா அமெரிக்க எல்லைக்கருகில் அமைந்துள்ள Stanstead நகரில் ட்ரக் ஒன்றை மடக்கினார்கள் எல்லை பாதுகாப்பு பொலிசார்.

அப்போது, அந்த ட்ரக்குக்குள் 44 வெளிநாட்டவர்கள், நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.

சிறுபிள்ளைகளோ, உட்காரக்கூட இடமில்லாமல் நின்றுகொண்டிருக்க, அவர்களிடையே ஒரு கர்ப்பிணியும் மூச்சுவிடக்கூட முடியாமல் திணறிக்கொண்டு அமர்ந்திருந்திருக்கிறார்.

நல்லவேளையாக அவர்கள் யாருக்கும் எந்த உடல் நல பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் புலம்பெயர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், அவர்களைக் கடத்திக்கொண்டு வந்ததாக Ogulcan Mersin (25), Dogan Alakus (31) மற்றும் Firat Yuksek (31) என்னும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் மீது, புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், குற்றச்செயலில் ஈடுபட ஒருவரை தூண்டுவது மற்றும் உதவுவது, சட்டவிரோதமாக கனடாவுக்குள் ஆட்களைக் கொண்டுவர உதவியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.