Reading Time: < 1 minute

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கனடாவின் மொன்ரியலில் வயோதிபர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொன்ரியல் பொலிசார் அறிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக நாடு முழுவதும் இதுபோன்ற ஊழல்கள் அதிகரித்து வருகின்றன என்றும் பல நகரங்களில் பொலிஸாரால் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மொன்ரியல் பொலிசார் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையில் 34, 39, மற்றும் 45 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் 36, 37 வயதுடைய இரண்டு பெண்களை கைது செய்தனர்.

இதில் மூவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பொலிசார், மற்ற இருவரை நிபந்தனையுடன் பிணையில் விடுவித்துள்ளனர்.

மோசடி முறைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும், இதுவரை புகாரளிக்கப்படாத திருட்டுகளும் இருக்கக்கூடும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மொன்ரியல் நகரத்திற்கு தெற்கில் உள்ள லாங்குயே நகரில் மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருடர்கள் தங்களது இலக்குகளை அணுகும்போது வழிகாட்டல் கேட்பது போல நடித்து, பின்னர் நன்றியாக ஒரு செயற்கை மோதிரம் அல்லது சங்கிலியை பரிசாக வழங்குகிறார்கள்.

அந்த பரிசை அணியச் சொல்வதற்குப் பயன்படுத்தப்படும் அந்த தருணத்தில், நபரின் உண்மையான நகைகளை திருடுகிறார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடர்களுக்கு உதவும் மற்றொரு நபர் வாகனத்தில் காத்திருக்கிறார், மற்றும் திருட்டுக்குப் பிறகு அவர்கள் விரைவாக தப்பிச் செல்கின்றனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.