Reading Time: < 1 minute

கனடாவின் ஒரனோவில் அமைந்துள்ள மசூதி ஒன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தந்தையும் அவரது 14 வயதான மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பவுமன்வில்லில் உள்ள கனடியன் டயர் கடையில் யூத விரோத பிரசுரங்களை வைத்தனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனவரி 30 ஆம் திகதி பிற்பகல் பவுமன்வில்லின் கிரீன் சாலையில் உள்ள கனடியன் டயர் கடையில் ஒருவரால் பல இடங்களில் யூத எதிர்ப்பு பிரசுரங்கள் வைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கண்காணிப்பு கமெராவில் இது பதிவாகியுள்ளது. பணியாளர்கள் பிரசுரங்களைக் கண்டதும் உடனே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், மே 24ஆம் திகதி மாலை ஓரனோவில் சர்ச் ஸ்ட்ரீட் வடக்கில் அமைந்துள்ள 111வது எண்ணுடைய மசூதிக்கு காவல்துறை அழைக்கப்பட்டது.

அப்போது பல வாகனங்கள் மற்றும் மசூதியின் முன்னிரை கதவுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து, காவல்துறையினர் ஜூன் 10ஆம் திகதி ஓரனோவில் உள்ள வீட்டொன்றில் இரு சோதனைகள் மேற்கொண்டு, தந்தை மற்றும் மகனை கைது செய்தனர்.

அந்த வீட்டில் இருந்து பல முக்கியமான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

34 வயதுடைய ஆண் மீது சொத்துக்கு சேதம் விளைவித்ததற்கான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 வயதுடைய மகன் மீது மத இடத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“இந்த சம்பவங்கள் எங்கள் சமுதாயத்தினருக்கே, குறிப்பாக யூத மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக டர்ஹாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.