Reading Time: < 1 minute

கனடாவில், தங்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் கார்களில் ஒன்றைத் திருடமுயன்ற திருடர்களில் ஒருவரை துணிச்சலாக மடக்கினார் இளைஞர் ஒருவர்.

Tamil Business Directory

கனடாவின் Bramptonஇல் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் Gurbaj Sanghera (18), நேற்றிரவு வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, ஏதோ உடையும் சத்தம் பலமாக கேட்டிருக்கிறது. நடந்தது என்னவென்றால், மூன்று பேர் Gurbaj வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு தொங்கிக்கொண்டிருந்த கார் சாவியை எடுத்திருக்கிறார்கள்.

சத்தம் கேட்டு மாடியிலிருந்து இறங்கிய Gurbaj, வீட்டுக்குள் முகமூடி அணிந்த மூன்று பேர் நிற்பதைக் கண்டு அதிர்ந்தாலும், உடனே சுதாரித்துக்கொண்டு, இதோ வருகிறேன் என சத்தம் போட்டுக்கொண்டே அவர்களை துரத்தியுள்ளார். சத்தம் கேட்டு தன் தந்தையும் சகோதரரும் வருவார்கள் என்ற நம்பிக்க்கையில் அவர் சத்தமிட்டுள்ளார்.

அதற்குள் இரண்டு திருடர்கள் ஓடிவிட, சாவியை எடுத்த ஒரு திருடன், கார் ஒன்றின் கதவைத் திறந்து உள்ளே ஏறிவிட்டிருக்கிறான். ஆனால், காரைத் திருடமுடியாத வகையில் அது பூட்டப்பட்டிருக்கவே, அவன் காருக்குள் சிக்கிக்கொள்ள, Gurbajஇன் அண்ணன் மற்றொரு சாவியைக் கொண்டு காரைத் திறக்க, இனி திருடமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட அந்த திருடன், தப்பியோட முயன்றுள்ளான்.

ஆனால், Gurbaj, அவரது சகோதரர், அவர்கள் தந்தை ஆகியோர் சேர்ந்த அவனை மடக்கிப் பிடித்துள்ளார்கள். பொலிசார் வரும்வரை அவனை அவர்கள் பிடித்துவைத்துக்கொள்ள, பொலிசார் வந்து அவனை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளற் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த Gurbaj, அந்த திருடர்கள் மீண்டும் வரக்கூடும் என்றும், அதனால் தாங்கள் அச்சத்திலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், இந்து அந்த பகுதியில் நடக்கும் முதல் சம்பவம் அல்ல. ஏற்கனவே இதேபோல பல கார் திருட்டுகள் நடந்துள்ளதை பொலிசாரே ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆகவே, எதிர்காலத்தில் இதுபோன்ற அச்சுறுத்தும் சம்பவங்களைத் தவிர்க்க பொலிசார் ஆவன செய்யவேண்டும் என Gurbaj குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.