ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில் கனடா ஒருபோதும் பங்கெடுக்காது என்று பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக நிலவி வந்த விமர்சனங்களுக்குப் பிறகு, நடைபெற்ற நாடாளுமன்ற கேள்வி நேரத்திற்கு நேரில் வந்த பிரதமர், கனடாவின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலில் கனடா ஒருபோதும் ஈடுபடாது என பிரதமர் உறுதியளித்தார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுப்பது அவசியம் என்பதில் கனடா உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களுடன் பதற்றத்தைத் தணிப்பது குறித்துப் பேசியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்திற்கு வராமல் “மார்கோ போலோ” போல உலகைச் சுற்றி வருவதாக பிளாக் கியூபெக்வா (Bloc Québécois) தலைவர் யவ்ஸ்-பிரான்சுவா பிளான்ஷெட் கடுமையாக விமர்சித்தார்.
மத்திய கிழக்கிற்கான கனடாவின் தொலைநோக்குப் பார்வை என்ன என்பதைத் தெளிவுபடுத்துமாறு அவர் கோரினார். மறுபுறம், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் நாட்டின் பொதுப் பாதுகாப்பு, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
திங்கட்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் கலந்துகொள்ளாததை பி.சி கன்சர்வேட்டிவ் எம்.பி ஃபிராங்க் கபுடோ கேலி செய்தார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.