Reading Time: < 1 minute

கனடா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சீக்கியர் ஒருவரின் அனுமதியின்றி அவரது தாடி சவரம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் பிராம்ப்டனில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார், ஜோஹிந்தர் சிங் (Joginder Singh Kaler, 85).

ஜோஹிந்தர் சீக்கிய கொள்கைகளை கடுமையாக பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சீக்கியர்களின் கொள்கைகளில் ஒன்று தங்கள் தாடியை அவர்கள் மழிக்கக்கூடாது என்பதாகும்.

ஆனால், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள் ஜோஹிந்தரின் தாடியை மழித்துள்ளார்கள்.

அவர் சுயநினைவின்றி இருந்ததால் அவர்கள் அவரிடம் அனுமதி கோரியிருக்க வாய்ப்பில்லை. அவருடைய உறவினர்களிடமும் யாரும் அனுமதி கோரவில்லையாம்.

ஆக, அனுமதியின்றி ஜோஹிந்தரின் தாடியை சவரம் செய்ததால் சீக்கிய சமுதாய அமைப்பினர் வருத்தமடைந்துள்ளார்கள்.

இது கலாச்சார விதி மீறல் என சீக்கிய அமைப்புகள் கூறியுள்ள நிலையில், அது தொடர்பாக முழுமையான மீளாய்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது.