மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரில் கனேடிய இராணுவத்தின் பங்களிப்பை முற்றாக நிராகரிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில், அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், கன்பெராவில் அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு தனது ஆதரவை வெளியிட்டிருந்த பிரதமர் கார்னி, தற்போது அவுஸ்திரேலியாவில் தனது கருத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளார்.’எந்தவொரு சூழ்நிலையிலும் போரில் பங்கேற்பதை நாம் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது. இது ஒரு கருதுகோள் சார்ந்த கேள்வி என்றாலும், தேவைப்படும்போது நாம் எமது நட்பு நாடுகளுடன் உறுதியாக நிற்போம்’ என அவர் குறிப்பிட்டார்.
ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்கள் ‘சர்வதேச சட்டங்களுக்கு முரணானது’ எனத் தெரிவித்த அவர், இது சர்வதேச ஒழுங்குமுறை தோல்வியடைந்துள்ளதையே காட்டுவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
மார்க் கார்னியின் இந்த ஆசிய-பசிபிக் விஜயம் (இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான்) அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.அவுஸ்திரேலியநாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற ‘நடுத்தர சக்திகள்’ ஒன்றிணைந்து புதிய உலக விதிகளை எழுதவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அரிய வகை கனிம வளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அவுஸ்திரேலியாவுடன் மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவை இணைத்துக்கொள்வது குறித்த அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில், மார்க் கார்னியின் இந்த வெளிநாட்டுப் பயணம் சர்வதேச அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.