மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்கள் அதிகரித்து ஈரான் தொடர்பான போர் விரிவடைந்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் இருந்து வெளியேற கனடா அரசின் தூதரக உதவியை நாடும் கனேடியர்களின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 108,000 க்கும் அதிகமான கனேடியர்கள்வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் அமைப்பில் பதிவு செய்துள்ளனர்.
வெளியேற முடியாமல் சிக்கியுள்ள கனேடியர்களை பாதுகாப்பான நாடுகளுக்கு கொண்டு செல்ல அரசு வணிக விமானங்களில் முன்பதிவு இருக்கைகள் ஏற்பாடு செய்வதுடன் சார்ட்டர் விமானங்களையும் ஒருங்கிணைத்து வருவதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலப் போக்குவரத்தையும் ஏற்பாடு செய்து அருகிலுள்ள நாடுகளுக்கு அவர்களை கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கடல் வழிகள் பாதுகாப்பாக இல்லாத காரணத்தால் கப்பல்கள் மூலம் வெளியேற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
உதவி கோரும் பெரும்பாலான கனேடியர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.