டொராண்டோவில் நடைபெற்ற விக்டோரியா தின கொண்டாட்டத்தின் போது, திரண்டிருந்த பொதுமக்களின் மீது பட்டாசுகளை வீசி எறிந்ததாகக் கூறப்படும் இரண்டு பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன் எனவும், மற்றொருவர் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களது அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ‘ஆஷ்பிரிட்ஜஸ் பே’ (Ashbridges Bay) கடற்கரைப் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோக்களில், நபர் ஒருவர் “ரோமன் கேண்டில்” ரக பட்டாசை அங்கிருந்த கூட்டத்தை நோக்கியும், நடைபாதையை நோக்கியும் நேரடியாகச் செலுத்துவது பதிவாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
விக்டோரியா தின வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதே இரவில், திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதாக மேலும் மூன்று நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எனினும், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த 2022-ஆம் ஆண்டு இதே கொண்டாட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது. அப்போது இரண்டு பேர் சுடப்பட்டனர், இருவர் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டனர், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
மேலும், பல குழுக்கள் ஒருவரையொருவர் நோக்கி பட்டாசுகளை கொடூரமாக வீசிக்கொண்டனர்.
2022-இல் ஏற்பட்ட அந்த மோசமான கலவரத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு டொராண்டோ காவல்துறை கடந்த சில ஆண்டுகளாக இந்த விழாவின் போது தங்களது பாதுகாப்பை பலமடங்கு தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.