Reading Time: < 1 minute

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்க இருப்பதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

Tamil Business Directory

இந்நிலையில், கனேடிய மாகாணமொன்றில், அமெரிக்காவுடன் இணைய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், அம்மாகாண மக்களில் நான்கில் ஒருவர் அமெரிக்காவுடன் இணைவதற்கு ஆதரவாக இருப்பது தெரியவந்துள்ளது.

Nanos என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்பவர்களில் 64 சதவிகிதம் பேர் தாங்கள் கனடாவில் இருப்பதுதான் சிறந்தது என தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், 22 சதவிகிதம் பேர், அமெரிக்காவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஐந்தில் ஒருவர், கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக்கும் ட்ரம்பின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆல்பர்ட்டாவில் வாழ்வோரில் 100,000க்கும் அதிகமானோர் கனடாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் சமீபத்தில் நூற்றுக்கணக்கானோர் கைகளில் அமெரிக்கக் கொடிகளை ஏந்தியபடியும், Make Alberta Great Again என்னும் வாசகம் பதித்த தொப்பிகளை அணிந்தபடியும் பேரணிகளில் பங்கேற்றதைக் காணமுடிந்தது.

ஏற்கனவே, கியூபெக் மாகாணத்திலும் தனியாக பிரியவேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாகவே நிலவி வரும் நிலையில், தற்போது எழுந்துள்ள ஒரு கேள்வி, கனடா, பிளவின் விளிம்பில் உள்ளதா? என்பதுதான்!