Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பெண்ணொருவர் வளர்த்துவந்த நாய் ஒன்று, அந்தக் குடும்பத்தையே தீவிபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener நகரில் வாழ்ந்துவருகிறது நான்சி எல்லிஸ் குடும்பம்.

கடந்த மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு சுமார் 1.50 மணியளவில், நான்சியின் செல்லப்பிராணியான டியூக் என்னும் நாய் விடாமல் குரைக்கத் துவங்கியுள்ளது.

அத்துடன் அந்த நாய் நான்சியின் முடியைப் பிடித்து இழுத்து, அவரது முகத்துக்கு நேரே பலமாக குரைத்துள்ளது.

வாசலில் யாரோ நிற்கிறார்களோ என எண்ணி எழுந்த நான்சி ஜன்னல் வழியாக பார்க்க, வீட்டின் முன்பகுதி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக நான்சி கணவரை எழுப்ப, அவசர உதவியை அழைத்துள்ளார் அவர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் வீட்டுக்கு விரைய, வீட்டிலிருந்த அனைவரும், செல்லப்பிராணிகள் உட்பட பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டார்கள் என்றாலும், வீட்டின் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டன.

வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் உட்பட, தீயால் ஏற்பட்ட சேதம் சுமார் 400,000 டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

நான்சி குடும்பம் தற்போது ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ள நிலையில், அடுத்து வாடகைக்கு வீடு பார்த்தாகவேண்டும் என்கிறார் அவர்.

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உள்ளூர் மக்களுடைய உதவியால் தற்போது தேவைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது நான்சி குடும்பம்.

எல்லாவற்றிற்கும் மேல், இன்று எங்கள் குடும்பம் உயிருடன் இருக்கிறதென்றால், அதற்கு எங்கள் செல்ல நாயான டியூக்தான் காரணம் என்கிறார் நான்சி.

டியூக் மட்டும் எங்களை எழுப்பவில்லையென்றால், நாங்கள் யாரும் இன்று உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் நான்சி நெகிழ்வுடன்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.